திங்கள், 20 ஜனவரி, 2014

அறிவியல் தமிழ் அறிஞர்கள்


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர், 
புதுச்சேரி-605008
புத்தம் புதிய கலைகள் -பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே –அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை .. .. ..
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
என்றெல்லாம் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கனவுகண்ட நம் மகாகவியின் கனவினை நனவாக்கும் விதத்தில் தமிழ் மொழியில் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைக் (அறிவியலை) கொண்டுவந்து சேர்ந்த அரும்பணியாளர்கள் பலரின் அயராத உழைப்பால் நமக்குக் கிடைத்த பெருஞ்செல்வம்தான் அறிவியல் தமிழ். இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தமிழறிஞர்கள் மிகப்பலராவர். அவர்களில் குறிப்பிடத்தக்க மூவரின் அறிவியல் தமிழாக்கப் பணிகள் சுருக்கமாக.

1. சிந்தனைச் சிற்பி .சிங்காரவேலர் (1860 -1946)
இந்தியாவின் மூத்த பொதுடைமை இயக்கத் தலைவர். பெரியார் முதலான தமிழகத்தின் முற்போக்கு இயக்கத் தலைவர்கள் அனைவருக்கும் முன்னோடியாக மதிக்கப்படுபவர். எளிய தமிழில் அறிவியலை எழுத்தில் பேச்சிலும் தமிழ்மக்களுக்கு எடுத்துரைத்த தம் அரும்பணியால் அறிவியல் தமிழின் பிதாமகனாகப் போற்றப்படுபவர்.
சிங்காரவேலர் அறிவியல் சிந்தனைகளைக் குடியரசு, புரட்சி, பகுத்தறிவு போன்ற இதழ்களில் 1930 களில் தொடர்ந்து எழுதியதோடு மட்டுமின்றி, அறிவியல் கட்டுரைகளுக் கென்றே 1934இல் தமது 75ஆம் வயதில் புது உலகம் என்ற பெயரில் மாதம் இருமுறை வெளிவரும் இதழைத் தொடங்கினார். முதல் இதழில் அவர் கீழுள்ளவாறு எழுதி யிருந்தார்,
Pure Science சுத்த விஞ்ஞானத்தை எடுத்துரைக்க தமிழ் பாஷையில் ஒரு தனித்த பத்திரிகைகூட இல்லை; இந்த அவசியத்தைப் பூர்த்தி செய்ய புது உலகம் என்ற பத்திரிகை வெளிவந்ததைப் போற்றுகின்றோம். பெரும் பான்மையான மக்கள் சயன்சின் மார்க்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளாத தோசத்தால் மூட ஒழுக்கங்களாலும், ஜாதி -சமய துராசாரங்களாலும் வாடி வதங்கி வருகின்றனர். நிழலைக் கண்டு பயப்படும் குதிரை, ஆடு, மாடுகளைப் போல் நமது நாட்டு மக்கள், பூமி நிழலால் மறைக்கப்பட்டு உண்டாகும் சந்திர கிரகணத்தையும், சந்திரன் நிழலால் மறைக்கப்பட்டு உண்டாகும் சூரிய கிரகணத்தையும் கண்டு பயப்படும் அறியாமையை என்னவென்று கூறுவது? இந்தக் குறைகளை நீக்குவதற்கு ஒரு விஞ்ஞானப் பத்திரிகை வேண்டுமென்ற கோரிக்கை இந்தப் புது உலகம் தோற்றத்தால் நிறைவேறு மென்று நம்புகின்றோம். - (புதுஉலகம் - மே - 1935)
குடியரசு இதழில் வாசகர்களின் அறிவியல் தொடர்பான கேள்விகளுக்குத் தொடர்ந்து இதழ்கள் தோறும் விரிவான பதிலளித்துவந்தார் சிங்காரவேலர். சான்றாக, கோழி முந்தியதா? முட்டை முந்தியதா? என்ற வாசகர் கேள்விக்கு அவர் அளித்த விரிவான பதிலின் ஒருபகுதி வருமாறு,
பறவைகள் ஊர்வன வற்றிலிருந்தும், ஊர்வன தவளைக் கூட்டங் களிலிருந்தும், தவளைகள் மீன்களிலிருந்தும், மீன்கள் புழு-பூச்சியிலிருந்தும், புழு-பூச்சிகள் சிறு கிருமிகளிலிருந்தும் சிறுகிருமிகள் நுண்முட்டை களிலிருந்தும் உயிர் பெற்றவை என டார்வின் கூறுவதை அவர் விளக்குகிறார். இந்தச் சிறுமுட்டைகள்தான் அனைத்து உயிர்கள் தோன்றுவதற்கும் காரணமாகும். தாவரங்களும் அந்தச் செல்களிலிருந்தே உருவாகின்றன. விதைகளும் முட்டை போன்ற வடிவுடையனவே ஆகும். முட்டைகளும், விதைகளும் தாதுக்களால் உண்டானவை. குறிப்பாக, முட்டையானது, பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, கார்பன் ஆகியவை, தட்ப - வெப்ப இயற்கைச் சூழலால் கூட்டுச் சேர்க்கையாகி முட்டை வடிவம் பெறுகிறது. இந்த முட்டை எல்லா உயிர்களுக்கும் எப்படி மூலமுதலோ, கோழிக்கும் அந்த முட்டைதான் மூலமுதலாகும். எனவே கோழிக்கு முந்தியது முட்டையே யாகும்.
தமிழகத்தில் அறிவியல் உணர்வை வளர்க்க முயன்றவர்களில் சிங்காரவேலரே முதல் மனிதராவார்.
சிங்கார வேலரின் அறிவியல் படைப்புகளில் சில:
1. கடவுளும் பிரபஞ்சமும்
2. நடத்தை என்ற நவீன ஆராய்ச்சி
3. மனிதனும் பிரபஞ்சமும்
4. மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்
5. கோழிமுட்டை வந்ததும் காணாமல் போனதும்
6. கல்மழை உண்டாகும் விதம்
7. விஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும்
8. பிரபஞ்சப் பிரச்சினைகள்
9. விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும்
10. தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் -பல பகுதிகள்
11. விஞ்ஞானத்தின் அவசியம்
12. பேய், பிசாசு
13. தத்துவ, விஞ்ஞான, பொருளாதாரக் குறிப்புகள்
14. மனோ ஆலய உலகங்கள்
15. பிரகிருத ஞானம்
16. ஜோதிட ஆபாசம்
17. பகுத்தறிவென்றால் என்ன?
18. பிரபஞ்சத்தில் தற்காலப் பிரச்சினை
19. பிரபஞ்சமும் நாமும்
20. உலகம் சுழன்று கொண்டே போகிறது
21. பிரபஞ்சத் தற்காலப் பிரச்சினை
நம் மக்களிடத்துப் பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் பேய் -பிசாசு நம்பிக்கை, சாமியாடல், மந்திரம் வைத்தல், பில்லி -சூனியம், ஆன்மா, சகுனம் பார்த்தல், குறி பார்த்தல், மை வைத்துப் பார்த்தல் ஆகியவற்றையும் மற்றும் இந்து -கிறித்துவம், இசுலாம், புத்தம், சமணம், சைவம், வைணவம் போன்ற மதங்களிலுள்ள மூடநம்பிக்கை களையும் அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து அரிய விளக்கங்களை சிங்கார வேலர் எடுத்துக் காட்டியுள்ளார்.
நமக்கு அறிவியல் கண்ணோட்டம் உருவாவதற்காக, எந்தப் பொருளையும் நிகழ்வையும் ஏன், எதற்கு, எப்படியென்று உற்று நோக்கி ஆராய வேண்டும் என்கிறார். குறிப்பாக, உற்று நோக்கல், சோதித்துப் பார்த்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொருளை நோக்கினால் தவறான நம்பிக்கை ஏற்படாமல் சரியான முடிவு கிடைக்கும் என்பது அவரின் கருத்து. அரசியல் களத்தில் நின்றுகொண்டு அவர் காலத்திய உலக அறிவியல் முன்னேற்றங்களை எல்லாம் தொடர்ந்து வாசித்து அவற்றைத் தமிழில் தமிழ்மக்களுக்காக ஆக்கித் தருவதில் சிங்காரவேலர் முனைப்பு காட்டினார். பகுத்தறிவும் சுயமரியாதையும் அறிவியல் கல்வியால் கிட்டும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து அறிவியல் விழிப்புணர்வைத் தமிழில் பரப்பும் பணியில் ஈடுபட்டு அறிவியல் தமிழ் வளர்த்தார் சிங்காரவேலர்.

2. பெநாஅப்புசாமி
பெ. நா.அப்புசாமி (1841-1986) தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தில் பிறந்தவர். அறிவியல் தமிழ் முன்னோடி, தொழிலால் வழக்கறிஞர். தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய பன்மொழிப் புலமை கொண்ட இவர் அறிவியல் தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றினார். தமது இறுதி மூச்சு அடங்கும் அன்று கூட இவர் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பிவிட்டே மறைந்தார் 1917 ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை இவர் எழுதியுள்ள கட்டுரைகள் 5000க்கும் மேலாக இருக்குமெனக் குறிப்பிடப்படுகிறது. இவற்றுள் 3000க்கும் மேற்பட்டவை அறிவியல் கட்டுரைகள் ஆகும். இவரது அறிவியல் கட்டுரைகள் தமிழர் நேசன், தினமணி, இளம் விஞ்ஞானி, தியாக பூமி, கலைக்கதிர், கலைமகள், செந்தமிழ், ஆனந்த விகடன் முதலான பல இதழ்களில் வெளிவந்துள்ளன. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே நூற்றுக்கணக்கான கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர். சிறந்த மொழிபெயர்ப்பாளரான அப்புசுவாமியின் மொழிபெயர்ப்புகள் தரமானவை. இவரின் முதல் கட்டுரை பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா? என்ற தலைப்பிலானது. 1917ஆம் ஆண்டு தமிழ் நேசன் இதழில் இக்கட்டுரை வெளியானது.
பெ.நா.அப்புசாமி அவர்கள் தமிழில் எழுதியுள்ள நூல்கள் இருபத்தெட்டு. அவற்றில் சிறுவர்களுக்கான நூல்கள் பன்னிரண்டு. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த நூல்கள் இருபத்தைந்து.
பெ.நா.அப்புசாமி தமிழில் எழுதிய நூல்களில் சில,
1.    அற்புத உலகம்
2.    மின்சாரத்தின் விந்தை
3.    வானொலியும் ஒலிபரப்பும்
4.    அணுவின் கதை
5.    ரயிலின் கதை
6.    பூமியின் உள்ளே
7.    இந்திய விஞ்ஞானிகள்
8.    எக்ஸ்கதிர்கள்
9.    சர்வதேச விஞ்ஞானிகள்
10.    மூன்று சக்தி ஊற்றுக்கள்
11.    வாயுமண்டலத்தில் உள்ள வாயுக்கள்
12.    அற்புதச் சிறு பூச்சிகள்
13.    அணு முதல் ரேடார் வரை
14.    பயணம் அன்றும் இன்றும்
15.    பயணத்தின் கதை
16.    வானத்தைப் பார்ப்போம்
17.    சித்திரக் கதைப்பாட்டு 6 புத்தகங்கள்
18.    சித்திரக் கதைத்தொடர் 6 புத்தகங்கள்
அவர் மொழிபெயர்த்த நூல்களில் சில,
1.    விஞ்ஞானமும் விவேகமும் (Science & Common Science)
2.    அணுசக்தியின் எதிர்காலம் (Our Nuclear Future)
3.    அணுயுகம் (Report on the Atom)
4.    அணு முதல்பாடம் (Atomic Primer)
5.    விஞ்ஞான மேதைகள் (Giants of Science Vol.I, II)
6.    சுதந்திரத் தியாகிகள் (Crusaders for Freedom)
7.    காலயந்திரம் (Time Machine)
8.    இன்றைய விஞ்ஞானமும் நீங்களும் (Todays Science and You)
9.    இந்தியாவில் கல்வித்துறைச் சீரமைப்பு (Educational Reconstruction in India)
10.    ராக்கெட்டும் துணைக்கோள்களும் (Rockets and Satellites)
11.    ஏரோப்ளேன் (Aeroplane)
12.    டெலிபோனும் தந்தியும் (Telephone & Telegraph)
13.    விண்வெளிப் பயணம் (Space Travel)
பெ.நா.அப்புசுவாமியின் அறிவியல் கண்ணோட்டமும் அணுகுமுறைகளும் இருபதாம் நூற்றாண்டின் முதல் அரை நூற்றாண்டில் நிலவிவந்த சமூக அரசியல் சூழ்நிலைகளுடன் ஒப்பிடும்போது தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்தனவாக உள்ளன.
மக்கள் அறிவியலைக் கற்று, அறிவியல் மனநிலையைப் பெற்று அதற்கு இணங்க நடந்துவந்தால் அவர்கள் பகுத்தறியும் பண்பைப் பெறுவார்கள், நாடும் வளர்ச்சியுறும்.
என்ற இந்த நோக்கமே அவரை அறிவியல் தமிழின் பக்கம் ஆற்றுப்படுத்தியதென அறியலாம். இவருடைய அறிவியல் கட்டுரைகள் அனைத்துமே ஒரு சராசரி மனிதன் அறிவியலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எளிய தமிழ் நடையில் உள்ளன. அப்புசாமியின் எளிய மொழி நடைக்கு அவரது கலைச் சொல்லாக்கமும் ஒரு காரணமாகும். முடிந்தவரை மக்களின் பேச்சு வழக்கில் இருந்த சொற்களையும் எளிய கலைச் சொற்களையுமே அவர் பயன்படுத்தியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் வடசொற்களைக் கலந்து எழுதும் வழக்கம் இருந்தது. அப்புசாமியின் நடையிலும் தொடக்கத்தில் இப்போக்கே காணப்படுகிறது. காலப்போக்கில் நடையில் மாற்றம் ஏற்பட்டுத் தரம் வாய்ந்த அறிவியல் தமிழ்ச் சொற்களைப் பெய்து இயல்பான எளிய இனிய தமிழில் அறிவியலை ஆக்கும் முயற்சியில் அவர் பெருவெற்றி பெற்றுள்ளார்.

3. பெரியசாமி தூரன் (1908- 1987)
பெரியசாமி தூரன், தமிழின் கலைக்களஞ்சியத்தை உருவாக்கித் தந்த அறிவியல் அறிஞர். இவர் பெரியார் மாவட்டம் ஈரோடு வட்டத்தில் உள்ள மொடக்குறிச்சியை அடுத்த மஞ்சக்காட்டுவலசு என்னும் சிற்றூரில் பழனிவேலப்பன் -பாவாத்தாள் தம்பதியினருக்கு 1908ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 26ஆம் நாள் பிறந்தார். கணிதப் பட்டதாரி ஆசிரியரான இவர் 1929 முதல் 1948 வரை ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர்த் தமிழின் கலைக்களஞ்சியம் தயாரிக்கும் பணியில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். பதினைந்து ஆண்டுகள் அரும்பாடுபட்டுத் தமிழின் முதல் கலைக்களஞ்சியத்தை மிகச் சிறப்பாக உருவாக்கித் தந்தார்.
திசு.அவினாசிலிங்கம் தமிழகத்தின் கல்வி அமைச்சராக இருந்தபோது தமிழ் வளர்ச்சிக் கழகம் நிறுவப்பட்டது. இக்கழகத்தின் சார்பில் தமிழில் கலைக்களஞ்சியம் பல தொகுதிகளாக வெளியிடத் திட்டம் தீட்டப்பட்டது. இந்த மாபெரும் பணிக்கு முதன்மை ஆசிரியராகத் பெரியசாமி தூரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948 அக்டோபரில் கலைக்களஞ்சியப் பணி தொடங்கப்பட்டது. ஒவ்வொன்றும் எழுநூற்றைம்பது பக்கங்கள் கொண்ட பத்துத் தொகுதிகளாகக் கலைக்களஞ்சியத்தை அவர் உருவாக்கித் தந்தார். 1200 அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் 15,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அரிய தகவல்களைக் கொண்ட கட்டுரைகளாக. இக்கலைக் களஞ்சியத்தில் வரலாறு, நிலவியல், அரசியல், தத்துவம், இலக்கியம் முதலான செய்திகளோடு வேளாண்மை முதல் புதிய அறிவியல் தொழில்நுட்பம் வரை அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றிருந்தன.
கலைக்களஞ்சியப் பணியில் பல்வேறு அறிஞர்கள் ஆங்கிலத்தில் தந்த கட்டுரைகளை எல்லாம் தூரனே முன்னின்று தமிழாக்கம் செய்தார். 1948 இலிருந்து ஆறாண்டுக் காலம் கடுமையான உழைப்புக்குப் பின்னர் 1954 இல் முதல்தொகுதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஏறத்தாழ ஆண்டுக்கு ஒரு தொகுதியாகக் கொண்டுவரப்பட்டு 1963 ஜனவரி 4ஆம்நாள் ஒன்பதாம் தொகுதி குடியரசுத் தலைவர் இராதாக்கிருஷ்ணன் தலைமையில் மக்களுக்குக் காணிக்கையாக்கப்பட்டது.
இக்கலைக்களஞ்சியத் தொகுப்புப் பணி மட்டுமல்லாது பல்வேறு அறிவியல் நூல்களையும் தூரன் அவர்கள் தமிழுக்கு ஆக்கித் தந்துள்ளார்கள். அவருடைய அறிவியல் நூல்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.. முதல் பிரிவு மரபணு (Genetic) தொடர்பானது. இவ்வகையில் அவர் மூன்று தமிழ் நூல்களைத் தந்துள்ளார்.
1. பாரம்பரியம் (1949),
2. பெற்றோர் கொடுத்த பெருங்கொடை (1954),
3. கருவில் வளரும் குழந்தை 1956
நூலின் இறுதியில் கலைச்சொல் விளக்கங்களை இணைத்துத் தந்துள்ளார். பாரம்பரியம் நூலின் சுருக்கம்தான் பெற்றோர் கொடுத்த பெருங்கொடை என்ற நூல்.
இரண்டாம் பிரிவு உளவியல் தொடர்பானது. இவ்வகையில் அவர் ஏழு நூல்களைத் தந்துள்ளார்.
1.    குழந்தை உள்ளம் 1947,
2.    குமரப்பருவம் 1954,
3.    தாழ்வு மனப்பான்மை 1955,
4.    அடிமனம் 1957,
5.    மனமும் அதன் விளக்கமும் 1968
6.    குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் 1953 (குழந்தை உள்ளம் நூலின் விரிவாக்கம்
7.    மனம் என்னும் மாயக் குரங்கு 1956 (மனமும் அதன் விளக்கமும் நூலின் சுருங்கிய வடிவம்)
தமிழ்க் கலைக்களஞ்சியம் தந்த அறிவியலறிஞர் பெ.தூரனின் அறிவியல் தமிழ்ப்பணி அளப்பரியது. கிட்டத்தட்ட 15,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் இடம் பெற்றுள்ள கலைக்களஞ்சியப் பதிவுகளில் அறிவியல் கட்டுரைகள் பல ஆயிரங்கள். காலத்திற்கும் நின்று புகழ்சேர்க்கும் அரும்பணியால் அறிவியல் தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர் பெரியசாமி தூரன் அவர்கள்.
முனைவர் நா.இளங்கோதமிழ் இணைப் பேராசிரியர், புதுச்சேரி-605008

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறியாத பல தகவல்கள் ஐயா... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...